டிக்டாக் நேரலையில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாடல் அழகி!


மெக்சிகோவில் டிக்டாக் நேரலையின் போது மாடல் அழகி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள ஜபோபான் எனும் பகுதியில் பியூட்டி சலூனில் பணியாற்றி வந்தவர் வலேரியா மார்க்வெஸ். 

23 வயதான இவர், டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பாலோவர்ஸ்களுடன், சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்து வந்துள்ளார்.

இவர் தான் செய்யும் மேக்கப் பணி பற்றிய வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். 

அவ்வப்போது, நேரலையில் தனது பாலோவர்களுடனும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், வலேரியா மார்க்வெஸ் தான் பணியாற்றும் சலூனில் இருந்து, டிக்டாக் நேரலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வலேரியாவை சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளார். 

இது டிக் டாக் நேரலையில் அப்படியே ஒளிபரப்பானது. இதனைக் கண்ட அவரது பாலோவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவரது செல்போனை எடுத்த நபர், தனது முகத்தை நேரலையில் காட்டியுள்ளார்.

இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். 

மேலும், பாலின வன்முறை காரணமாக இந்தக் கொலை அரங்கேறி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.