பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்; மேலும் அறுவர் கைது!
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் அறுவர் ஹோமாகம பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அறுவரும் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியதையடுத்து உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கிரிந்திவெல, தெல்கொட, புத்தல, குளியாப்பிட்டிய மற்றும் கலன்குட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22,23 மற்றும் 24 வயதுடையவர்கள் ஆவர்.
இது குறித்து தெரியவருவதாவது,
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவனை பலமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பல்கலைகழக மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.