அமெரிக்க ஜனாதிபதி அபுதாபி விஜயம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் கத்தார் நாட்டில் இருந்து நேற்றைய தினம் அபுதாபிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ட்ரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13ஆம் திகதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார்.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ட்ரம்பிற்கு அமீரக மன்னர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்பு அளித்தார்.
முன்னதாக அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழங்க முப்படை இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதில் இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. பிறகு நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக மன்னர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் இருதரப்பு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
முதலாவதாக சவூதி அரேபியா சென்று அங்கு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அல் சவுத்தை சந்தித்து பேசினார். இதில் இராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ரியாத் நகரில் நடந்த வளைகுடா-அமெரிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.