பல்கலைகழக மாணவனின் மரணம் தொடர்பில் விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கை!


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவம் பகிடிவதையுடன் தொடர்புடையது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் மூத்த விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பின்னர் மாணவன் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேவேளை, கடந்த 2 வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.