நாளை முதல் மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் ஆலோசனைகள்!
இலங்கை மின்சார சபையால் இந்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட 2 வது மின்சார கட்டணம் குறித்து பொதுமக்களுடன் வாய்மொழி ஆலோசனைகள் நாளைய தினம் (23) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வாய்மொழிக் கருத்துக்களைப் பெறப்படும் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மின்சார கட்டணத்தை விட இது குறைவாக இருக்கும் என்று CEB தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை PUCSL இடம் சமர்ப்பித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையில் CEB இதனை குறிப்பிட்டுள்ளது.
2014-2022 காலகட்டத்தில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்கான செலவுகள் அதிகரித்த போதிலும், மின்சார கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அந்தக் காலகட்டத்தில் எரிபொருள் விலைகள், நிலக்கரி, உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகளும் தொடர்ந்து அதிகரித்தன என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளைக் காரணம் காட்டி, 2025 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு மின்சாரக் கட்டணங்களை 18.3% அதிகரிப்பதற்கு CEB முன்மொழிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.