நுவரெலியாவில் மற்றுமொரு பஸ் விபத்து!
நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளானதில், 4 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து, நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவுப் பகுதியில் நேற்றைய தினம் (13) மாலை 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலாவிற்காக குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனையடுத்து பேருந்து வீதியின் இடதுபுறத்தில் உள்ள மலையில் மோதி நிறுத்தப்பட்டது.
பேருந்து விபத்துக்குள்ளான பகுதி செங்குத்தான மற்றும் வளைவுகள் நிறைந்த வீதியில் இருப்பதாகவும், கடந்த காலங்களில் அந்த இடத்தில் பல கடுமையான விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
அதேவேளை விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து வலப்பனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை கடந்த தினங்களில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.