டிரம்பின் வரி பிரச்சனையை சமாளிக்க ஹர்ஷவின் பரிந்துரை
டிரம்பின் வரி பிரச்சனையை சமாளிக்கவும், எதிர்காலத்தில் நாடு முன்னேறவும் இலங்கை, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership – RCEP) இணைவது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
நேற்று (06) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய பொருளாதார கூட்டணியான RCEP-யில் இலங்கை சேர வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
RCEP-யில் சேருவதற்கு பல நிபந்தனைகள் உள்ளன என்றும், அவற்றுக்கு இணங்காமல் இணைவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டுத்தாபன ஒப்பந்தம் (Economic and Technology Cooperation Agreement – ETCA) மற்றும் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை (Singapore Free Trade Agreement) செயல்படுத்துவது மிக அவசியம் எனவும் அவர் கூறினார்.
இதற்கு முனைப்பு மற்றும் மனப்பான்மைகள் மாற்றப்பட வேண்டிய அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வகையான மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான திட்டம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார பார்வையில் உள்ளதாகவும், அதற்கான 'வரைபடம்' உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளைத் தவிர்க்கக் காத்திருக்காமல், மார்ச் 6ஆம் திகதி முதல் அவற்றை குறைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அறிக்கைகள் பலனளிக்காதவை எனப் கருதப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அமெரிக்க வரிகளை மீளாய்வு செய்ய ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவும் பிற நாடுகளும் அமெரிக்க வரிகளை எதிர்கொள்வதில் எவ்வாறு செயல்பட்டன என்பதை, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எடுத்துச் சுட்டியதாகவும், அதனை முன்னோடியாகக் கொண்டு இலங்கையும் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.