இந்திய பிரதமர் மோடிக்கு ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது வழங்கி கௌரவிப்பு!


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில தலைவர்கள் மற்றும் அரசுத் தலைவர்களுக்கான இலங்கையின் மிக உயர்ந்த விருதான இலங்கை ‘மித்ர விபூஷண’ விருதை வழங்கி வைத்துள்ளார்.

இந்த விருதானது இலங்கை மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள அசைக்க முடியாத ஆதரவைப் பாராட்டி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பல கூட்டு இந்திய-இலங்கைத் திட்டங்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது எனக்கு வழங்கப்பட்டது பெருமைக்குரிய விடயமாகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தப் பெருமை எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமையாகும். இது இந்திய இலங்கை மக்களுக்கு இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் ஆழமான நட்புக்கு கிடைத்த மரியாதையாகும்

உண்மையான அண்டை நாடாகவும் நண்பராகவும் நமது கடமைகளை நிறைவேற்றியிருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

2019 பயங்கரவாதத் தாக்குதல், கோவிட் தொற்றுநோய், சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம்.

எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான ‘மகாசாகர்’ ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என இந்தியப் பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.