நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!
நாட்டில் இன்று மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க வீடுகளுக்குள் தங்கியிருக்கவும், மரங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களுக்கு அருகில் நிற்காமல் இருப்பதற்கும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.