பண்டிகைக்கால நிவாரண பொதி ; மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
நாட்டு மக்களுக்கு பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருள் பொதிகளை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 1000 மில்லியன் ரூபாய் நிதி 1500 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், "நாம் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள் பொதியொன்றை 2500 ரூபாய்க்கு வழங்குகின்றோம். அஸ்வெசும இல்லாத, ஆனால் அஸ்வெசுமவிற்காக எதிர்பார்த்துள்ள எட்டு இலட்சம் விண்ணப்பதாரர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும். இதற்காக லங்கா சதொச நிறுவனத்தின் வழங்குநர்களிடம் விலை மனு கோரி நடவடிக்கைகளை மேற்கொள்வோம்," என்று கூறினார்.
அத்துடன் 2 கிலோகிராம் பெரிய வெங்காயம், 2 கிலோகிராம் உருளைக்கிழங்கு, 2 கிலோகிராம் பருப்பு, 1 டின் மீன், 3 கிலோகிராம் சிவப்பு சீனி, 2 கிலோகிராம் கோதுமை மா, 2 சமபோஷ பக்கட்டுகள், 70 கிராம் மற்றும் 90 கிராம் சோயாமீட் பக்கட்டுகள் 4 வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, 15 முதல் 17 கிலோகிராம் வரையிலான பொருட்கள் அடங்கிய ஒரு பை வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.