அக்டோபர் மற்றும் நவம்பரில் கனமழைக்கு வாய்ப்பு!
தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்பட்டாலும், இது பரவலான அல்லது கணிசமான மழைவீழ்ச்சியாக இருக்காது எனவும், குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி கசுன் பஸ்க்குவல் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சியை எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே எதிர்பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இக்காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது நிலவிவரும் வலுவான ‘எல் நினோ’ காலநிலை நிலைமை காரணமாக, இம்முறை எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி தீவிரமடைந்து, பலத்த மழையாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இக்காலப்பகுதி நெருங்கும் நிலையில், எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி தொடர்பான விரிவான மற்றும் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
