ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம் – அரச வர்த்தமானியில் வெளியீடு!


இலங்கையின் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகளை வலுப்படுத்தும் நோக்கில், "இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்" என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்புரைக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், ஊடகத் துறையில் பணியாற்றும் பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைந்த தொழில்சார் அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

புதிய நிறுவகத்தின் கீழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆய்வாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறை அங்கீகாரத்துடன் உறுப்பினர்களாக இணைக்கப்படவுள்ளனர்.

மேலும், ஊடகக் கல்வி மற்றும் பயிற்சி நெறிகள் நடத்தப்படுவதுடன், தொழில்சார் பரீட்சைகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப திறன் மேம்பாட்டு திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், ஊடகத் துறையில் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் தொழில்முறை தரங்களை மேம்படுத்தும் நோக்கில் உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நடத்தைக் கோவை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதிய நிறுவனத்தின் நிர்வாகத்திற்காக 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் பேரவை அமைக்கப்படவுள்ளது. இதில் 8 பேர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், 7 பேர் நியமன அடிப்படையில் இணைக்கப்படவுள்ளனர்.

நிரந்தர ஆளும் பேரவை அமைக்கப்படும் வரை, அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இடைக்கால பேரவையொன்றும் செயற்படவுள்ளது. இதில் அமைச்சின் செயலாளருடன், குறைந்தது 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஊடக நிபுணர்கள் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகத் துறையை மேலும் தொழில்மயமாக்கி, தரமான மற்றும் பொறுப்பான ஊடக கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் இந்த புதிய சட்டமூலம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.