காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி!


போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு காசாவின் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் அமைந்துள்ள பகுதியில் நேரடி பல்கலைக்கழகக் கல்வியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

கான் யூனிஸின் அல்-மவாசி பகுதியில் இந்த “பல்கலைக்கழக வளாகம்” அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இணையவழி (Online) கல்வியை மட்டுமே நம்பியிருந்த மாணவர்கள், மீண்டும் வகுப்பறைகளுக்குத் திரும்பி நேரடியாகக் கற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வகுப்பறைக்குள் நுழைந்த மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்து ‘அல் ஜசீரா நெட்’ ஊடகத்திடம் பேசிய ஒரு மாணவி,

“திரைகளுக்கு முன்னால் அமர்ந்து படித்ததற்கும், போர்க்கால நெருக்கடிகளுக்கும் மத்தியில், மீண்டும் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தது ஒரு விதிவிலக்கான தருணம். இது நான் மீண்டும் பல்கலைக்கழக வாழ்க்கையோடு இணைந்துவிட்டேன் என்ற உணர்வைத் தருகிறது,” எனத் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் “எல்லைகளற்ற அறிஞர்கள்” அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குள் சுமார் மூன்று துனம்  பரப்பளவில் இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. எளிமையான கட்டமைப்புகளைக் கொண்டு 7 வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மின்சாரம், இணைய வசதி, மேசைகள் மற்றும் கரும்பலகைகள் என அடிப்படை கற்றல் சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளில் இஸ்லாமிய பல்கலைக்கழக (Islamic University) மாணவர்கள் இந்த முன்னோடி வகுப்புகளில் கலந்துகொண்டனர்.

தற்போது ஒரு பல்கலைக்கழகத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, விரைவில் ஒரு ஒருங்கிணைந்த கால அட்டவணையின் கீழ் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் காசாவின் கல்விச் சூழலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.