ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு!
யார் இந்த மொஜ்தபா? – அதிகாரமும் பின்னணியும்.
ஈரானின் புதிய உச்சத் தலைவராக, மறைந்த அயதுல்லா அலி காமெனி அவர்களின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல்–அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதலில் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடைக்கால நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இடைக்கால நிர்வாகம்
உச்சத் தலைவரை தேர்வு செய்யும் வரை, இடைக்கால தலைமை கவுன்சிலின் தலைவராக அயாத்துல்லா அலிர்சா அராஃபி நியமிக்கப்பட்டார். அவருடன் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் தலைமை நீதிபதி கோல்ம்ஹொசைன் மொஹ்செனி எஜீ ஆகியோர் அடங்கிய மூவர் குழு நாட்டை வழிநடத்தும் வகையில் பொறுப்பேற்றிருந்தது.
இந்நிலையில், 88 ஷியா மதகுருமார்களை கொண்ட நிபுணர்கள் குழு, மொஜ்தபா கமேனியை புதிய உச்சத் தலைவராக தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைமறைவில் செல்வாக்கு
56 வயதான மொஜ்தபா கமேனி, எந்த அரசியல் பதவியையும் அதிகாரப்பூர்வமாக வகிக்காதிருந்தாலும், நாட்டின் அதிகார மையங்களில் திரைமறைவில் செல்வாக்கு செலுத்தியவராகக் கருதப்பட்டார். குறிப்பாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அமைப்பின் மீது அவருக்கு வலுவான தாக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
IRGC அமைப்பின் ஆதரவுடன் அவரின் தேர்வு இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தனிப்பட்ட வாழ்க்கை
மொஜ்தபா கமேனி, 2004ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கோலம்-அலி ஹடாத்-அடேலின் மகள் ஜஹ்ரா ஹடாத்-அடேலை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1987–1988 காலகட்டத்தில் நடைபெற்ற ஈராக்–ஈரான் போரில் அவர் பங்கேற்றதாகவும், 2009 தேர்தல் போராட்டங்களை அடக்குவதில் பாசிஜ் அமைப்பை கட்டுப்பாட்டில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சொத்து விவகாரம்
Bloomberg வெளியிட்ட அறிக்கையின் படி, மொஜ்தபா கமேனி உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க சொத்து வளத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவில் சுமார் 138 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் சுவிஸ் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சத் தலைவரின் அதிகாரங்கள்
ஈரானின் உச்சத் தலைவர் பதவி, நாட்டின் மிக உயர்ந்த அதிகாரப் பதவியாகும். ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் அவர் செயல்படுகிறார். நீதித்துறை, அரசு ஊடகங்கள், IRGC உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரமும் இவருக்கே உண்டு.
மேலும், நாட்டின் அடிப்படை கொள்கைகள், வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் நீதித்துறை தொடர்பான இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் முழுமையாக உச்சத் தலைவருக்கே வழங்கப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய உச்சத் தலைமையில் ஏற்படும் இந்த மாற்றம், மத்திய கிழக்கு அரசியல் நிலவரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.
Tags:
உலகம்
