பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்!


பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான அதிகாரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதோடு, அதற்குரிய விதிமுறைகளின் வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட வேண்டிய முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மறுசீரமைப்புச் செயல்முறையின் போது எழும் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுதல், பாடசாலை மாணவர் போக்குவரத்தில் நிலவும் சிக்கல்களைக் குறைத்து முறையான போக்குவரத்துப் பொறிமுறையொன்றை உருவாக்குதல் மற்றும் "சிசு செரிய" பாடசாலை போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகச் சட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், சிறுவர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மாணவர் போக்குவரத்தின் போது பதிவாகும் துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுத்தல், பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தி அதனைப் பொறுப்புவாய்ந்த சேவையாக மாற்றுவது ஆகியன குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியன ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.