அச்சுறுத்தல்களால் விவாதங்களை மௌனிக்கக் கூடாது - லண்டன் உரை ரத்து தொடர்பில் நாமல் அதிருப்தி!


லண்டனில் திட்டமிடப்பட்ட தமது உரைகள் ரத்து செய்யப்பட்டமை துரதிஷ்டவசமான சம்பவம் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்கள் விவாதங்களை தீர்க்கும் இடங்களாக அமைய வேண்டுமே தவிர, அச்சுறுத்தல்கள் மூலம் அதனை மௌனிக்க செய்ய கூடாது என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் பல தலைமுறை அனுபவத்தை கொண்ட பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவிருந்த பகிரங்க விவாதங்களில் உரையாற்ற தாம் மிகுந்த ஆவலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தனது கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பவர்களுடன், நேரடி விவாதத்தை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பகிரங்க உரையாடல்களில் மாத்திரமே அர்த்தமுள்ள, சமரச முன்னேற்றங்கள் வெளிப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தகைய ஈடுபாட்டை மறுப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்ப்ரிஜ் பல்கழைக்கழகங்களின் விவாத நிகழ்வுக்கு, தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, எதிர்காலத்தில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.