சாதாரண தரப் பரீட்சை - பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!


2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் மார்ச் 12 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விடைத்தாள்கள் மதிப்பீடு மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விடைத்தாள்களின் முதல் கட்ட மதிப்பீடு மார்ச் 12 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டப் பரீட்சை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும், மூன்றாம் கட்டப் பரீட்சை ஏப்ரல் 21 முதல் மே 15 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

விடைத்தாள்கள் மதிப்பீடு பணிகளுக்காக 40,000 ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பரீட்சை, 3,545 மையங்களில் நடத்தப்படுவதுடன், இந்த ஆண்டு 3,82,249 பாடசாலை மாணவர்கள் மற்றும் 69,214 தனியார் பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 4,51,463 பேர் பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர்.