விலங்குகளின் தோல்களுடன் விமான நிலையத்தில் வைத்து சிக்கிய வர்த்தகர்!
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட முதலைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
சந்தேக நபரான வர்த்தகர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று பிற்பகல் 11.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரான வர்த்தகர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது வர்த்தகர் கொண்டுவந்த பயணப்பொதிகளிலிருந்து முதலைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் 19 தோல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
