வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகன் ; வெட்டிக் கொன்ற தந்தை!
அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகனை, தந்தை வாளால் வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய 45 வயதுடைய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞர் நீண்டகாலமாகப் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்தார் எனவும், இதற்காக வீட்டிலுள்ள பெறுமதிமிக்க பொருட்களைத் திருடி விற்று வந்தார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று மாலை, வீட்டின் பொருளொன்றைத் திருடிக்கொண்டு தப்பிக்க முயன்ற மகனை, தந்தை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
மகன் பிடிபட்டதையடுத்து தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது மதுபோதையில் இருந்த தந்தை, ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த வாளால் மகனின் தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தந்தையிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
