பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!


இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இது இந்தியாவின் வரலாற்று ரீதியான வெளியுறவுக் கொள்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும், உலகளாவிய விமர்சனங்களுக்கு மத்தியில் இது ஒரு “தார்மீக கோழைத்தனம்” என்றும் அவை சாடியுள்ளன.

பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார்.

இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய நாடாளுமன்றமான ‘நெசெட்டில்’ (Knesset) மோடி உரையாற்றினார். இதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியத் தலைவர் என்ற பெயரை அவர் பெற்றார். அங்கு உரையாற்றிய அவர், “இந்தியா முழு நம்பிக்கையுடன் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது” என்று தெரிவித்தார்.

பிரதமரின் இந்தப் பயணத்திற்கு உள்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது:

காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்காக உலகம் முழுவதும் இஸ்ரேலை விமர்சித்து வரும் நிலையில், மோடி அங்கு சென்றிருப்பது “தார்மீக கோழைத்தனம்” என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பலஸ்தீன உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்த இந்தியாவின் நிலையான ராஜதந்திர நிலைப்பாட்டை இந்த நடவடிக்கை சிதைத்துவிடும் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மோடியின் இந்தப் பயணம் நெதன்யாகுவின் “கொலைவெறி ஆட்சியை” அங்கீகரிப்பதாக அமையும் என்று கூறியுள்ளது.

இது பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு உடந்தையாக இருக்கும் “வெட்கக்கேடான செயல்” என்று அக்கட்சி வர்ணித்துள்ளது. மேலும், நெதன்யாகுவை ஒரு “போர்க்குற்றவாளி” என்றும் அந்த அமைப்பு விமர்சித்துள்ளது.

உள்நாட்டு அரசியலில் இஸ்ரேலிய தாக்கம்?

பஜக அரசு 2014-ல் ஆட்சிக்கு வந்தது முதல், சிறுபான்மையினருக்கு எதிரான “புல்டோசர்” நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதில் இஸ்ரேலிய முறைகளை பின்பற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் கொள்கைகள், மேற்கு கரையில் இஸ்ரேல் பின்பற்றும் குடியேற்ற முறையை பிரதிபலிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

2023 அக்டோபர் முதல் 2025 அக்டோபர் வரை இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்த 26 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

காசாவில் போர் நடந்து வரும் சூழலில், இஸ்ரேலில் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 10,000 இந்தியர்களை அனுப்பும் அரசின் முடிவை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன.

காசாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானங்களில் இந்தியா பலமுறை வாக்களிக்காமல் தள்ளி நின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.