வட்டிப் பணத் தகராறில் இளைஞர் கழுத்தறுத்துக் கொடூரக் கொலை!


அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கட்டுவனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

வட்டிக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட நீண்டகால முரண்பாடு மற்றும் வாய்த்தர்க்கமே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட மோதலின் போது, சந்தேகநபர்கள் மேற்படி இளைஞரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். 

அவர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் விசேட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.