பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்!
சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) வழக்கில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரியான ஹிந்த் அல் ஒவைஸின் (Hind Al Owais) பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவம் குறித்துப் பேசிவந்த ஒரு உயர்மட்ட அதிகாரி மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யார் இந்த ஹிந்த் அல் ஒவைஸ்?
ஹிந்த் அல் ஒவைஸ் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளில் ஒருவர். 2015-ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றிய முதல் அமீரகப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.
துபாய் எக்ஸ்போ நிகழ்வில் பங்கேற்பாளர் மேலாண்மை பிரிவின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றினார். தற்போது அமீரகத்தின் மனித உரிமைகளுக்கான நிரந்தரக் குழுவின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் நீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், ஹிந்த் அல் ஒவைஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான தொடர்புகள் குறித்து பின்வரும் தகவல்கள் வெளிவந்துள்ளன,
எப்ஸ்டீன் உடனான மின்னஞ்சல் தொடர்புகளில் ஹிந்த் அல் ஒவைஸின் பெயர் சுமார் 469 முறை இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
2011-2012 காலப்பகுதியில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மின்னஞ்சலில், “ஒரு பெண்ணைத் தயார் செய்வதே கடினம், இரண்டு பெண்களைத் தயார் செய்வது சவாலானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், எப்ஸ்டீனுக்கு தனது சகோதரியை அறிமுகம் செய்ய முன்வந்ததாகவும், அவர் தன்னை விடவும் அழகானவர் என்று அவர் குறிப்பிட்டிருப்பதாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச மேடைகளில் பெண்ணியம் மற்றும் பாலின சமத்துவம் குறித்துப் பேசிவந்த ஒருவர், இளம் பெண்களைத் தவறான வழியில் எப்ஸ்டீனுக்குப் பழக்கப்படுத்தும் தரகர் வேலையைச் செய்தாரா என்ற கோணத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும்போது, இன்னும் எத்தனை முக்கியப் புள்ளிகளின் முகத்திரைகள் கிழிந்து அவர்களின் உண்மை முகம் வெளிவரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எப்ஸ்டீனின் கொடூரங்களுக்குத் துணையாக இருந்த பல “பெண்ணியவாதிகள்” மற்றும் அதிகார வர்க்கத்தினர் குறித்த உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
