இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட 2 பேர் கைது!
தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டாளர் சேவையை விட்டுச் சென்றமையால், அவரை மீண்டும் சேவையில் இணைத்து, கல்வி அமைச்சின் மூலம் தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட இணைப்பை நீடித்துக் கொள்வதற்கான பணிகளைச் செய்து கொடுப்பதற்காக சந்தேகநபர்கள் 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளனர்.
குறித்த பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், நேற்று பிற்பகல் தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்திற்குள்ளேயே வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தெஹியத்தகண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
