தேங்காய் எண்ணெய் தொடர்பில் எச்சரிக்கை


தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வரியை நீக்க அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய் வகைகள் கலக்கப்பட்டு சந்தைக்கு வரக்கூடிய அபாயம் உள்ளது என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே, இந்த நிலைமையால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இதன் விளைவாக, பாம் எண்ணெய் மற்றும் ஏனைய மாற்று எண்ணெய் வகைகள் சந்தையில் அதிகமாகப் புழக்கத்திற்கு வரக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.

வைத்தியர்களின் கருத்தின்படி, அதிக சூட்டில் உணவைப் பொரிப்பதற்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே ஏற்றது என்றும், பாம் எண்ணெய் உள்ளிட்ட பிற எண்ணெய்களைப் பயன்படுத்துவது சுகாதார அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தென்னை சார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்பவர்கள், உள்ளூர் சந்தைக்குத் தேவையான தேங்காய்களை வெளிநாட்டு ஏற்றுமதிக்குப் பயன்படுத்துவதால், உள்நாட்டில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதன் காரணமாக நுகர்வோர் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளை நுகர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படக்கூடும் எனவும் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.