சர்வதேச சந்தை பதற்றம்; இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள்


சர்வதேச சந்தையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய வர்த்தகப் போர் குறித்த அச்சம் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றத் தாழ்வுகள் பதிவாகி வருகின்றன.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தகவல்களின்படி, நேற்று (21) ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை சடுதியாக 15,000 ரூபாயால் உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழலே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இன்று (22) தங்கத்தின் விலையில் ஓரளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாய், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,450 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,625 ரூபாய், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 44,057 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக ஏற்படும் இந்த ஏற்றத் தாழ்வுகள் காரணமாக, நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பமான நிலை உருவாகியுள்ளது. வரும் நாட்களில் சர்வதேச சந்தையின் போக்கைப் பொறுத்தே உள்நாட்டு தங்க விலையில் நிலைத்தன்மை ஏற்படும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.