பள்ளிவாயலில் அயர்ந்து தூங்கியவரை கடித்துக் குதறிய குரங்கு!


திருகோணமலை தம்பலகாமம் அரபா நகரில் பள்ளிவாயலில் கடமை புரிந்த நபரொருவர் குரங்கு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று  (02) இடம் பெற்றது.

அதன்படி, குறித்த நபர் பள்ளிக்கு சென்று சற்று அயர்ந்து தூங்கிய நிலையில், அவரை குரங்கு கடித்து குதறியுள்ளது. 

குறித்த நபர் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பள்ளி நிருவாக சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் அதே குரங்கு அப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவரை கடித்து தாக்கியுள்ளது.

இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்த போதும்  எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என உரிய பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியான குரங்கு தாக்குதல் காரணமாக அப்பகுதிக்கு சென்று மதக் கடமைகளை நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும் நடமாட முடியாதுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.