5,000 ரூபா லஞ்சம் கோரிய இரு பொலிஸ் அதிகாரிகள் கைது!


அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் நேற்று  காலை கைது செய்யப்பட்டனர்.

அத்தனகடவல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தியபெதும பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

முறைப்பாட்டாளர், தனது மோட்டார் சைக்கிளில் கடந்த 9 ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த போது, ​​குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். 

இதன்போது, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன வருமான உத்தரவு பத்திரம் இன்றி, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. 

எனினும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளின் காப்புறுதிச் சான்றிதழ் மற்றும் காலாவதியான வாகன வருமான உத்தரவு பத்திரம் என்பவற்றை சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்வசம் எடுத்துள்ளனர். 

அந்த இரண்டு ஆவணங்களையும் திருப்பி வழங்குவதற்காக 5,000 ரூபா பணத்தை அவர்கள் இலஞ்சமாக கோரியுள்ளனர். 

அதற்கமைய, குறித்த இரண்டு அதிகாரிகளும் நேற்று காலை 11.30 மணியளவில் தியபெதும வாராந்த சந்தைக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

சந்தேகநபர்கள் ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.