யாழில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை!


யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உயர் தரம் கற்கும் மாணவர்களுக்குத் தலா 20ஆயிரம் ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர் ஜீவனோபாயமாக விவசாயத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், பெற்றோரில் ஒருவ ராவது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஏதாவதொரு கமக்காரர் அமைப்பில் உறுப்பினராகவும் இருத்தல்வேண்டும்.

2024 கல்வி ஆண்டுக்குரிய க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்து, 2027 ஆம் ஆண்டில் உயர் தரப் பரீட்சை எழுதும் மாணவராகவும் இருத்தல் வேண்டும். 

தகைமையுடைய விண்ணப்பதாரிகள், தமக்குரிய கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பெற்றோர் அங்கத்தவராகவுள்ள கமக்கார அமைப்பு, தங்களது பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் மாணவர் கல்வி கற்கும் பாட சாலை அதிபர் ஆகியோரது சிபாரிசுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை உரிய கமநல சேவைகள் நிலைய, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பாக கையளிக்கமுடியும்.

இந்தத் திட்டத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் விண்ணப்பதாரியால் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறு, குடும்ப வருமானம், மீள்குடியமர்வு என்பன கருத்தில் எடுக்கப்பட்டு, கமநல சேவைகள் நிலையப் பிரிவு மட்டத்தில் தெரிவு இடம்பெறும் என்று யாழ். மாவட்டம் கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் அறிவித்துள்ளார் .