அரச ஊழியர்களின் தகுதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!


எதிர்காலத்தில் தகுதி அடிப்படையிலேயே அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும், இந்த நாட்டில் அரச துறையானது கடந்த காலங்களில் அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசியல் பிரசாரங்களுக்காக  பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

இவ்வாறு சீரழிக்கப்பட்ட அரச சேவை பின்னர் பயனற்ற ஒரு சேவையாக மாறிவிட்டதாகவும்,  இதன் காரணமாக சேவையில் பொருத்தமான அரச ஊழியர்கள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, எதிர்காலத்தில் இது போல அரச துறைக்குள், அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கும், சீரழிவுகளுக்கும் இடமில்லை என பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை, எதிர்காலத்தில்  தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே அரச ஊழியர்களுக்கான  வேலைகள் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் ருவான் செனரத் மேலும் சுட்டிக்காட்டினார்.