மலையகத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!


நிலவும் சீரற்ற வானிலையால், மத்திய மலைநாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. 

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளயார், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகிறது.

மேலும் இவ் வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் மண்சரிவு அபாயமும் நிலவுகிறது.

எனவே இந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விமலசுரேந்திர, காசல்ரி, லக்ஸபான, நவலக்ஸபான, கெனியோன், மவுசாகலை, மேல் கொத்மலை, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் எந்நேரமும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்பதால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் உள்ள ஆறுகளுக்கருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.