சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ள இலங்கை மின்சாரசபை ஊழியர்கள்!
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் கடந்த மாதம் 4ஆம் திகதிமுதல் முன்னெடுத்துவரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மின்சாரசபையை மறுசீரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து, 24 கோரிக்கைகளைை அடிப்படையாகக்கொண்டு எமது தொழிற்சங்கங்கள் போராட்டம் மேற்கொண்டு வருகிறது.
அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வை பெற்றுத்தர தவறியதால், அடுத்த கட்ட நடவடிக்கையாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்தோம். என்றாலும் அரசாங்கம் எங்களுக்கு இதுவரை முறையான தீர்வொன்றை வழங்க தவறி இருக்கிறது.
அதனால் இன்றைய தினத்துக்குள் அரசாங்கம் முறையான தீர்வொன்றை வழங்க தவறும் பட்சத்தில் எமது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி, திங்கட்கிழமை முதல், உயர் அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் இருந்து தவிர்ந்திருப்பதற்கு தீர்மானிக்க இருக்கிறோம் என்றார்.