நீச்சல் பயிற்சியின்போது நடந்த விபரீதம்; 5 வயது சிறுவன் பலி!


நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை  நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவுடன் நீச்சல் பயிற்சியாளரின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சிறுவன்  நீரில் மூழ்கியுள்ளார்.

இதன்போது, சிறுவன் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் உடல் மேலதிக பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மிரிஹான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.