25 வயதிற்கு மேற்பட்ட நால்வரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்!


25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், களுத்துறை போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் வைத்தியர் சுரங்கி சோமரத்ன இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

பக்கவாத நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 30 வீதமானவர்கள் 20 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று வைத்தியர் சுரங்கி சோமரத்ன சுட்டிக்காட்டினார்.

பக்கவாதம் ஏற்படுவதற்கான பிரதான அபாய காரணியாக உயர் இரத்த அழுத்தம் (Hypertension) அடையாளம் காணப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 வீதமான பக்கவாத சம்பவங்களுக்கு உயர் இரத்த அழுத்தமே காரணமாக உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வைத்தியர்கள் பரிந்துரைத்தபடி, தங்களது மருந்துகளையும் (Medicines) சுகாதாரப் பரிசோதனைகளையும் தவறாமல் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் உயர் இரத்த அழுத்தத்தை ஒரு முக்கிய அபாயக் காரணியாகக் கருதி, அதைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.