எலிக் காய்ச்சலினால் 10 பேர் உயிரிழப்பு!
எலிக்காய்ச்சலினால் இவ் வருடம் அநுராதபுரம் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு எலிக் காய்ச்சலினால், 743 நோயாளர்கள் பதிவாகியதாகவும் அவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அவர்களுக்கு நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அதிக மருந்துகளை வழங்க வேண்டிய அவசியம், மனித வள பற்றாக்குறை, அதிக பணியாளர்களை நியமிக்க வேண்டிய தேவை, அவசர சிகிச்சை பிரிவுகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியம் போன்ற பல பிரச்சினைகளை மருத்துவமனை ஊழியர்கள் சந்திக்க வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
லெப்டோஸ்பைரா எனும் தொற்று உடலுக்குள் செல்வதால் இதய நோயாளிகளுக்கு வழங்கப்படுவது போன்ற வசதிகளை வழங்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே இது தொடர்பில் மக்கள் முடியுமானவரை அவதானத்துடன் இருக்குமாறு அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.