இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு!
இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில், இளைஞர்கள் மத்தியில், மாரடைப்புஅதிகரித்து வருவது தொடர்பில், முக்கிய விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.
25 ஆண்டுகளுக்கும் மேலாக இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு காலத்தில் 40 வயதுக்குட்பட்டவர்களில் அரிதாக இருந்த மாரடைப்பு, இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது.
ஒவ்வொரு மாதமும், 20 மற்றும் 30 வயதுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை தாம் சந்திப்பதாக கூறும் அவர், அதில் பலர் உடல் பருமன் அல்லது குடும்ப வரலாறு போன்ற பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாமல், மாரடைப்புக்கு உள்ளாகியுள்ளதை காண முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால் இந்த நிலைமைக்கு, நவீன வாழ்க்கை முறை காரணமாக உள்ளது. குறிப்பாக, மோசமான உணவு, உடல் செயலற்ற தன்மை, நாட்பட்ட மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமின்மை என்பன மாரடைப்புக்கான முக்கிய மூல காரணங்களாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வாரத்துக்கு குறைந்தது ஐந்து நாட்கள் 40 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இதற்கு ஜிம் தேவையில்லை. நடைபயிற்சி என்பது உங்கள் இதயத்தைப் பாதுகாக்க எளிமையான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பழக்கமாகும்.
நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற பிற செயல்பாடுகளும் சிறந்தவை என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
அசாதாரண சோர்வு, படபடப்பு
தூக்கமின்மை ஒரு முக்கிய இருதய ஆபத்து காரணி என்பதை பலர் உணரவில்லை. மோசமான தூக்கம் மன அழுத்த ஹோர்மோன் அளவை (கார்டிசோல் போன்றவை) அதிகரிக்கிறது.
குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் தமனிகளை சேதப்படுத்துகிறது. ஆகவே ஒரு இரவுக்கு குறைந்தது 7 மணிநேரம் தூங்குங்கள். இது ஒரு மருத்துவத் தேவையாகும் என்று மருத்துவர் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் குறைக்க வேண்டும். விதை எண்ணெய்களைத் தவிர்த்து, தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை உட்கொள்ளவும்.
உங்கள் உணவில் இருந்து மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்கவும். இந்த நிலையில், அசாதாரண சோர்வு, படபடப்பு அல்லது மார்பு இறுக்கம் ஏற்பட்டால், அவற்றை புறக்கணிக்காதீர்கள் என்றும் இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க அறிவுறுத்தியுள்ளார்.