ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆட்டுச் சந்தையை மூட விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெற்றது மகாராஷ்டிரா அரசு!


ஹஜ் பெருநாளுக்கு முன்னதாக, ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை அனைத்து கால்நடை சந்தைகளையும் மூடுமாறு மாநில கால்நடை நல ஆணையம் பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது.

ஹஜ் பெருநாள் , உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பெருநாள் ஆகும். அதன்படி,   ஹஜ் பெருநாள் வரும் ஜூன் 7ம் திகதி கொண்டாடப்படுகிறது.

பெருநாளை முன்னிட்டு, ஆடுகள் விற்பனை அமோகமாக இடம்பெறும். இந்நிலையில், பெருநாளை முன்னிட்டு மகாராஷ்டிராவில் கால்நடை சந்தைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog) மாநிலத்தில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (APMCs) ஜூன் 3 முதல் 8 வரை கால்நடை சந்தைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை இருக்கிறது. ஆனால், சந்தைகளையே நடத்தக் கூடாது என்றால் ஆடுகளை எப்படி விற்பது? என வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பெருநாள் காலத்தில் முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுப்பதாக, வேதனையைத் தருவதாக அமைந்த இந்தத் தடையைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் சுனாமியாக கிளம்பிய எதிர்ப்பலைக்கு மகாராஷ்டிர அரசு பணிந்து தடையை நீக்கியது.

இந்த தியாகத் திருநாள் நேரத்தில்தான் ஆடுகள் விற்பனை சந்தையால் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் மற்றும் ஆட்டுச்சந்தை வியாபாரிகள்  நிறைய இலாபம் அடைகிறார்கள்.

இவர்களின் பெரும்பான்மையானோர் இந்துக்கள்தான் ஆனால், ஆட்சியில் உள்ள பாஜக  மத வெறியர்கள் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்ம குரோத மனப்பான்மை காரணமாக பொருளாதார ரீதியாக இந்துக்களுக்கு நல்ல இலாபம் தரக்கூடிய ஆடுகள் சந்தையை ஹஜ் பெருநாள் சமயம் பார்த்து  இப்படி தடை செய்தால் அது இந்து விவசாயிகள் மற்றும் இந்து வியாபாரிகளுக்குத்தான் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை மிக அதிகமாக உண்டாக்கும்.