பல்கலையில் பகிடிவதை தொடர்பில் வெளியான அதிர்ச்சிக் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் - பதற்றத்தில் மாணவர்கள்!
பல்கலைக்கழகங்களில் கடந்த சில காலங்களாக இடம்பெற்றுவரும் பகிடிவதைகளால் மாணவர்கள் பலர் தமது உயிரை மாய்க்கும் சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. இது இலங்கையின் கல்வித்துறையை கறுப்புப்புள்ளிப் பட்டியலில் தள்ளியுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு பகுதிகளில் இருந்து வருகைதந்து பல மாணவர்கள் இணைந்து கல்வியை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
குடும்பத்தின் வறுமையைக் கருத்திற்கொண்டே பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து அரச அலுவலகங்களில் வேலைக்காகப் போராடுகின்றனர்.
இவ்வாறு பல இன்னல்களைக் கடந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாக கல்வி கற்கும் வேளை, பல்கலையிலுள்ள பகிடிவதை சட்டத்தால் மாணவர்கள் பலர் மன உளைச்சலுக்குள்ளாகி உயிரை மாய்த்துள்ளனர்.
இது வறுமையை புறந்தள்ளி உழைப்பை அரப்பணித்த பல்கலைக்கழகங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்பிய தாய் தந்தையருக்கு இதன் தாக்கம் ஈடு செய்யமுடியாத ஒன்றாகும். இதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக் கூறவேண்டியது கட்டாயமாகும்.
பகிடிவதைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி தற்போது தென்கிழக்கு பல்கலையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் நீதி கோரிய கடிதம் ஒன்றையும் அதிர்ச்சிக் காணொளிகள், குரல்பதிவுகள் என்பவற்றை வெளியிட்டுள்ளனர். அதிலும் பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்த ஆண், பெண் மாணவர்களையும் அடையாளப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களது கடிதத்தில், தாம் தொடர்ச்சியாக உடல் உள ரீதியில் சித்திரவதைக்குட்படுத்தப்படுகிறோம். மூத்தமாணவர் தாக்கியதில் முதலாமாண்டு மாணவனின் காதில் முறிவு ஏற்பட்டுள்ளது.
தினமும் வேப்பம் இலை உண்ணவேண்டிய கட்டாயத்துக்குட்பட்டுள்ளோம். பெண் மாணவிகளை மூத்த வகுப்பு பெண் மாணவிகள் வீடியோ கோலின் மூலம் அழைப்பை எடுத்து துஸ்பி்ரயோகம் செய்கின்றனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரிடமும் அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எமது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ளதுடன், உடனடியாக பகிடிவதைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.