பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த புதிய அனுமதி : வர்த்தமானி அறிவித்தல்!


பெண்கள், இரவு நேரங்களில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டி விநியோகஸ்தர்களாக (Waitresses) பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களினால், ‘கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தில்’ மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் ஊடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறையிலிருந்த சட்டத்தின்படி, 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மாலை 6.00 மணிக்குப் பின்னர் கழிப்பறை துப்புரவுப் பணியாளர்களாகச் சேவையில் ஈடுபடுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய திருத்தத்தின்படி, 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை துப்புரவுப் பணியாளர்களாகவோ அல்லது சிற்றுண்டி விநியோகஸ்தர்களாகவோ மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை பணியில் ஈடுபடுத்த முடியும்.

இரவு நேரத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பின்வரும் வசதிகளை வழங்குவது முதலாளிகளின் பொறுப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான தங்குமிட வசதி, போக்குவரத்து வசதிகள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நலன்புரி வசதிகள்.

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 51% ஆக இருந்தபோதிலும், தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்களிப்பு 34% ஆக மட்டுமே உள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான மனித வளத்தை வழங்குவதற்கும், பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் இருக்கும் சட்டத் தடைகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.