அனர்த்தம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை - ஆதாரத்தை காட்டுமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சவால்!


இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கைக்கு பாரிய அளவில் புயல் தாக்கம் ஏற்படும் என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதனை அரசாங்கம் கவனத்திற்கு கொள்ளவில்லை எனவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது.

இந்த அனர்த்தம் தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி ஏதேனும் ஓர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் முழுவதும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட காலநிலை குறித்த அறிக்கைகள் தம்மிடம் இருப்பதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப்பூர்வமாக இவ்வாறான அறிக்கை வெளியிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வாறான ஒரு முன்எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தால் அது குறித்து அனர்த்த முகாமைத்துவ மையம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆகவே நவம்பர் 12 ஆம் திகதி அறிவுறுத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது. எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்களின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.