ஏழு கண்டங்களின் உயர்ந்த சிகரங்களை அடைந்த முதல் இலங்கையரானார் யோஹான்!


உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயர்ந்த மலைகளை ஏறி முடித்து, ‘ஏழு சிகரங்கள்’ என்ற உலகின் மிகப்பெரும் மலையேற்ற சவாலை நிறைவு செய்த முதல் இலங்கையராக மலையேறும் வீரர் யோஹான் பீரிஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்த அரிய சாதனையை நிகழ்த்தியதன் மூலம் உலகின் தலைசிறந்த மலையேற்ற வீரர்களின் வரிசையில் இணைந்துள்ள ஜொஹான், இதுவரை எந்த இலங்கையரும் எட்ட முடியாத உயரமான மலை உச்சிகளில் இலங்கையின் தேசியக் கொடியை பறக்கவிட்டு இலங்கைக்கு புதிய அடையாளத்தையும், பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அவரது இறுதி முயற்சியான வட அமெரிக்காவின் டெனாலி மலையில் (6,190 மீற்றர்), கடுமையான வானிலை சவால்களை எதிர்கொண்டார். உறைபனி வெப்பநிலை மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளை கடந்து, 5,243 மீற்றர் உயரத்தில் உள்ள உயர் முகாமை சென்றடைந்தாலும், கடும் புயல்கள் மற்றும் பனிச்சரிவு அபாயம் காரணமாக பின்வாங்க வேண்டியிருந்தது. இருப்பினும், அவரது ஒட்டுமொத்த சாதனை இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சுமார் 10 ஆண்டுகளாக, பல சவால்களை எதிர்கொண்டு சில சமயங்களில் பின்வாங்கி, சில சமயங்களில் அந்த சவால்களை வென்று, தனது ஒரே கனவை நனவாக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜொஹன், இறுதியில் வெற்றியாளராகி, முழு உலகின் கவனத்தையும் ஈர்த்தார்.

அவர் 2014இல் தென்னாப்பிரிக்காவில் 5,895 மீற்றர் உயரமுள்ள கிளிமஞ்சாரோ மலையை (Mount Kilimanjaro) ஏறி தனது பயணத்தை ஆரம்பித்த அவர், 2016இல், அவர் ஆசியாவில் எவரெஸ்ட் மலையில் (Mount Everest) தனது முதல் முயற்சியை மேற்கொண்டார்.

ஆனால் அது தோல்வியில் முடிந்தது. எனினும், தனது முயற்சியைக் கைவிடாத ஜொஹான், 2018இல் 8,849 மீற்றர் உயரமுள்ள எவரெஸ்ட் உச்சியை வெற்றிகரமாக அடைந்தார்.

2019 ஆம் ஆண்டில் 2228 மீற்றர் உயரமுள்ள அவுஸ்திரேலியாவின் கொஸ்சியுஸ்கோ மலை உச்சி (Mount Kosciuszko) மற்றும் 2023 ஆம் ஆண்டில் 5642 மீற்றர் உயரமுள்ள ஐரோப்பாவின் எல்ப்ரஸ் மலை உச்சியை (Mount Elbrus) வெற்றிகரமாக அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து 2025இல், அண்டார்டிகாவில் வின்சன் மலையின் (Mount Vinson) உச்சியை (4,892 மீற்றர்) அடைந்த முதல் இலங்கையராக வரலாறு படைத்தார். பின்னர் தென் அமெரிக்காவில் அகொன்காகுவாவில் (Aconcagua) தனது முயற்சியைத் தொடர்ந்தார். அங்கு அவர் மோசமான வானிலைக்கு மத்தியில் 6,961 மீற்றர் உச்சியிலிருந்து 200 மீற்றர் தூரம் வரை சென்றடைந்தார்.

அதே ஆண்டில் அவர் வட அமெரிக்காவில் டெனாலியில் (6,190 மீற்றர்) ஆபத்தான சூழ்நிலைகளில் உயர் முகாமை அடைந்தார். இது அவரது அசாதாரண விடாமுயற்சி மற்றும் சாதனையின் ஒரு தசாப்தத்தைக் குறிக்கிறது.

அத்துடன், அவரது இந்த சாதனை இலங்கை மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

இலங்கையின் பெருமையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற யோஹான் பீரிஸ், கடந்த ஜூலை 8 ஆம் திகதி நாடு திரும்பினார். விமானநிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன், அவரை வரவேற்க நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் அவருக்கு ஆதரவளித்த அனுசரணையாளர்கள் வருகை தந்தனர், மேலும், ஜொஹன் தனது வெற்றியை அவர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள மறக்கவில்லை.

இதன்போது உரையாற்றிய யோஹான் பீரிஸ், ‘ஒவ்வொரு மலை உச்சியும் எனக்கு ஒரு பெரிய சவாலாக மாறியது. அவை என் தன்னம்பிக்கையையும், சகிப்புத்தன்மையையும் சோதித்தன. ஆனால் அந்த சவால்கள் மற்றும் சிரமங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு எனது இலக்கை நோக்கி நான் கடினமாக உழைத்தேன். ஒவ்வொரு தருணத்திலும் சகிப்புத்தன்மை மற்றும் உறுதிப்பாடு போன்ற குணங்களைக் கற்றுக்கொண்டேன். இலங்கைக்குப் பெருமை சேர்க்க விரும்பினேன். இறுதியில், அதை என்னால் அடைய முடிந்தது. ஒரு இலங்கையராக இருப்பதில் இதைவிட நான் ஒருபோதும் பெருமைப்பட்டதில்லை’ என்று ஜொஹான் பெருமையுடன் தெரிவித்தார்.

யோஹான் பீரிஸின் மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் அனுசரணையாளர்களான AUK Protection, Anlene, Link Samahan, Cinnamon Life – City of Dreams, Qatar Airways, Mastercard, W15, Wow Media Productions மற்றும் Wowlife Church ஆகியவற்றின் உறுதியான ஆதரவும் நம்பிக்கையும் அவரது வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன.