இறுதி சுங்கத் தீர்வை வழங்கப்படாத வாகனங்களுக்கு தீர்வொன்றை முன்வைக்க விசேட குழு நியமனம்!


கடனுறுதிக் கடிதங்கள் (LC) ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இதுவரை இறுதி சுங்கத் தீர்வை வழங்கப்படாமல் உள்ள வாகனங்கள் தொடர்பில் தீர்வொன்றை முன்வைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த வாகன இறக்குமதிகளில் காணப்படும் சிக்கல்களை ஆராய்ந்து, அவற்றுக்கு பொருத்தமான தீர்வை எட்டுவதற்குத் தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதே இக்குழுவின் பிரதான நோக்கமாகும்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 1,025 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் இதுவரை இறக்குமதியாளர்களால் விடுவிக்கப்படாமல் உள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது.

எனினும், நியாயமான காரணங்களால் குறித்த வாகனங்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் அறிவித்தால், அது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.