தமிழர்களை அநுர அரசு ஏமாற்றாது! - நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும்! விஜித ஹேரத் உறுதி
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு உறுதியுடன் செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் ஏமாற்றாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த காலங்களில் பல அரசுகள் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல், உண்மையானதும் நீடித்ததுமான அரசியல் தீர்வை வழங்குவதற்காக தற்போதைய அரசு பொறுப்புடன் செயற்படும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய, ஒற்றுமை மிக்க நாட்டை கட்டியெழுப்புவதே இந்த அரசின் முதன்மை நோக்கமாகும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது நாட்டின் உள்நாட்டு விடயமாக இருந்தாலும், சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசு வெளிப்படையாகவும் பொறுப்புடனும் செயற்படுவதாக நம்பிக்கை அளிக்க வேண்டிய தேவை உள்ளது.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது நம்பிக்கையை மீட்டெடுப்பதே இந்த அரசின் பிரதான இலக்காகும். அதற்காக அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு வழங்கப்படும். வாக்குறுதிகளுடன் மட்டும் அல்லாமல், அவற்றை நடைமுறையில் நிறைவேற்றும் அரசாகவே இந்த அரசு செயற்படும்” என அவர் தெரிவித்தார்.
